வெள்ளி, 18 ஜூன், 2010

காதல்

மேஷம் - காதல்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம் - காதல்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம் - காதல்

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம் - காதல்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் - காதல்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.


கன்னி - காதல்

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம் - காதல்


எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம் - காதல்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு - காதல்

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம் - காதல்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம் - காதல்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம் - காதல்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

வியாழன், 17 ஜூன், 2010

நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்...

தாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும். சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.

நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.

ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது. காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம். எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.

காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.

வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.

இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும். இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்

நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை! காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்! காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது. கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா? உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!

எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்

சனி, 12 ஜூன், 2010

காதல் ஒரு போர் போன்றது

அலை அலையாய் அவன் நினைவு வந்து, என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன். ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.

நினைவுகளின் தொடுகையிலே உயிர்ப்பூக்களைச் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அவனுக்கும் எனக்கும் என்ன சொந்தம்? அவனோடு எனக்கென்ன பந்தம?

குளிரிலே இதமான போர்வையாய், வியர்க்கையில் குளிர் தென்றலாய்,
மழையிலே ஒரு குடையாய், வெயிலிலே நிழல் தரு மரமாய், தனிமையில் கூடவே துணையாய், கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்..... அவன் நினைவுகள் எப்போதும் என்னோடுதான்.

ஓ... இது தான் காதலா! இது காதலெனும் பந்தத்தில் வந்த சொந்தமா?
எனக்கும் தெரியவில்லை.

வாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்பதையோ, அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் எனபதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பது இல்லை. ஏன், எதற்கு, எப்படி என்று தெரியாமலே நாம் சந்திப்பவர்களில் சிலர் மட்டும் எம் நெஞ்சங்களில் பிரத்தியேகமான இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். அப்படித்தான் இவனும் என்னுள் குடி புகுந்து, என் மனமுகட்டில் அமர்ந்திருக்கிறான்.

இன்றைய பொழுதில் அவன்தான் எல்லாமுமாய் எனக்கு இருக்கிறான். எந்தக் கணத்திலும் அவனை என்னால் மறக்க முடிவதில்லை. அவன் பக்கத்தில் இல்லை என்று சொல்ல முடியாத படி அவன் நினைவுகள் என்னுள்ளே விருட்சமாய் வியாபித்து, பூக்களாய் பூத்துக் குலுங்கி, அழகாய், கனி தரும் இனிமையாய் பிரவாகித்து இருக்கின்றன. எனது அசைவுகள் கூட அவனை மையப் படுத்தியே தொடர்கின்றன. எதைச் செய்தாலும் எங்கோ இருக்கும் அவன் என் பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பது போன்ற உணர்வுகள் கூடி, எப்படியோ எனது வேலைகள் எல்லாமே அவனுக்காகவே செய்யப் படுவன போல ஆகி விடுகின்றன.

இவையெல்லாம், இந்த உணர்வுகள் எல்லாம் எந்தக் கணத்தில் ஆரம்பித்தன என்று தெரியவில்லை. எதேச்சையாகத்தான் நடந்தது என்று சொல்லி விடவும் முடியவில்லை. எப்படி என்றும் தெரியவில்லை. ஆனால் அவன் இல்லாமல் நான் முழுமையாக இல்லை என்பதை மட்டும் ஒவ்வொரு பொழுதிலும் உணர்கிறேன். இது காதல்தானே!

காதல் பொய். அப்படி என்று ஒன்றுமே இல்லை. அது வெறும் பருவக் கோளாறு மட்டுமே என்று பலர் சொல்லக் கேட்டிருந்தாலும் காதல் இனிமையானது என்பதை உணர்ந்துதான் வைத்திருந்தேன். இப்போதுதான் அதன் முழுமையையும் உணர்கிறேன்.

அவன் எப்போதும் என் நினைவுகளில் சுழன்று கொண்டே இருக்கிறான். ஆனாலும் அவனை எப்போதும் ´மிஸ்´ பண்ணிக் கொண்டே இருக்கிறேன். அவனைத் தவிர்த்து வேறெதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை.

காதல் கொண்ட அனைவரும் பிதற்றும் வார்த்தைகள்தானே இவை என்று சொல்கிறீர்களா? அப்படித்தான் சொல்வீர்கள் நீங்களும் காதலில் விழும் வரை.
அதென்ன காதலில் விழுவது, அது என்ன குளமா, கிணறா என்று கேட்கிறீர்களா? அப்படித்தான் முன்னர் நானும் யோசித்திருக்கிறேன்.

எத்தனையோ தடவைகள் என்னருகில் எத்தனையோ பேர் கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே எனக்குத் தெரிந்ததில்லை. ஆனால் இப்பொழுது யாராவது என்னருகில் கட்டியணைத்தாலோ அல்லது கொஞ்சிக் குலாவினாலோ நான் தடுமாறிப் போகிறேன்.

காதல் என்பது உடல்களை விடுத்து உள்ளங்கள் மட்டும் ஸ்பரிசிக்கும் ஒரு இனிய பிணைப்பு என்றுதான் இதுவரை கருதியிருந்தேன். இப்போது அவன் முன் என் கருத்துக்கள் கொஞ்சம் தள்ளாடுகின்றன. அன்பை தழுவி உணர்ந்து கொள்வது போல், இறுக அணைத்து பகிர்ந்து கொள்வது போலக் காதலையும் ஆலிங்கனத்தால் உணர்ந்து கொள்ளலாம், பகிர்ந்து கொள்ளலாம்… என்பதெல்லாம் அவனோடான நேசத்தின் பின்தான் எனக்குப் புரிந்தது. ஒரு பார்வையால், ஒரு சிரிப்பால்… என்று காதலை உணர்த்தலாந்தான். அதே போல ஒரு தொடுகையால், ஒரு அன்பான அணைப்பாலும் கூட காதலை உணர்த்தலாம்.

அவன் நினைவுகள் என்னை எத்தனை தூரம் பரவசப் படுத்துகிறதோ, அதேயளவுக்கு என்னை வளைக்கும் அவன் கரங்கள் என் வரை நீளாதோ என்று ஏங்கவும் வைக்கிறது. என் காதோரம் படர்ந்து என்னைச் சிலிர்க்க வைக்கின்ற அவன் மூச்சுக் காற்றை இந்தக் காற்றுத் தன்னோடு கூட்டி வராதோ என்று மனம் சபலம் கொள்கிறது. ஏகாந்தப் பொழுதுகளிலெல்லாம் மனம் அவனோடு கைகோர்த்து நடக்கிறது. அருவியின் ஓசை அவன் சிரிப்பையும், தென்றலின் தழுவல் அவன் அணைப்பையும், இயற்கையின் தோற்றம் அவன் அழகையும் என்னுள் கவிதைகளாய்த் தெளிக்கின்றன. உதிக்கின்ற கவிதைகளில் எல்லாம் அவன் பிம்பந்தான் உயிர் கொள்கிறது.

முகம் பார்க்காமலே எழுத்தால், குரலால்... என்று ஏதேதோ காரணங்களால் நெஞ்சைத் தொட்டவர்கள் பலர். எத்தனையோ நூறு மின்னஞ்சல்களின் மத்தியில், முகமே தெரியாத ஒருவனின் ஓரிரு வரிகளே இதயச் சுவர்களை வேர்க்க வைக்கிறது. முழுமதியாய் சிரிக்க வைக்கிறது. காற்றுச் சுமந்து வரும் ஒரு குரல் நெஞ்சச் சுவர்களில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அந்த எழுத்துக்களுக்கு அல்லது அந்தக் குரலுக்கு அப்படி என்ன சக்தி இருக்கிறது என்று தெரிவதில்லை. அப்படித்தான் இவனிடமும் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவன் என்னை ஆக்கிரமித்தானா அல்லது நான் அவனுள் என்னைத் தொலைத்தேனா தெரியவில்லை. எதையும் பிரித்தறியவும் முடியவில்லை.

அவனை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சக் கூட்டுக்குள் ஏதோ உருள்வது போன்ற உணர்வு. அந்தரம். தவிப்பு. நினைக்கும் போதெல்லாம் என்றால்.. மறந்தும் போகிறேன் என்றல்லவா அர்த்தம் கொள்ளும். அப்படி அவனை மறப்பதும் இல்லை. எத்தனையோ முக்கியமான விடயங்கள் எல்லாம் மறந்து போகும். அவனை மட்டும் எந்தப் பொழுதிலும் மறக்க முடிவதில்லை. அவன் நினைவுகளே ஆதார சுருதியாய், என்னை ஆகர்ஷிக்கும் பொழுதுகளாய்… அவனில்லாமல் நானில்லை என்ற நிலையில்… படுக்கும் போது கூட அவன் நினைவுகளைத்தான் போர்த்திக் கொண்டு படுக்கிறேன். இது காதல்தானே.

மௌனம் கூட அழகு என்று சொல்வார்கள். நான் கூட பலருக்கும் எனது மௌனத்தையே பதிலாக்கி இருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் மௌனத்தை என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. விழி பேசும் போது மொழி தேவையில்லைத்தான். பார்க்கவே முடியாத தூரத்தில் மௌனம் எப்படி அழகாக இருக்கும்? அவன் மௌனமாய் இருக்கும் பொழுதிலெல்லாம், பிரபஞ்சம் பிரமாண்டமாய் பரந்து விரிந்திருப்பது போலவும், நான் மட்டும் அங்கு தனியாக இருப்பது போலவும் உணர்கிறேன். எங்கே அவன், எந்த அலையிலும் நம் சொந்தம் கலையாது என்று சொன்னவன் இப்போ எங்கே போய் விட்டான், என்று கலங்குகிறேன். மனம் கலைந்து, உடல் களைத்து, சலித்து விம்முகிறேன். சிறு துரும்பின் அசைவில் கூட அவன் மௌனம் என்னில் கண்ணீராய் சிதறி விடக் காத்திருக்கிறது.

மீண்டும் மீண்டுமாய் மின்னஞ்சல் கணக்கைத் திறந்து பார்க்கிறேன். எத்தனையோ வந்திருந்தாலும் அவனது வரவில்லை என்னும் போது மனசு வெறுமையாகி விடுகிறது. அந்த ஒரு சிறிய தாமதமே, ஏன்? எப்படி மறந்தான்? ஒரு மின்னஞ்சல் எழுதக் கூட முடியாமல் என்னை மறந்து விட்டானா? என்ற கேள்விகளை எனனுள் மிகுந்த ஆதங்கத்தோடு அடுக்கத் தொடங்கி விடுகிறது. அந்தப் பொழுதுகளில் எல்லாம் நான் சோகத்தில் துவண்டு போகிறேன். இதயம் இருண்டு போவது போல உணர்கிறேன். கணப் பொழுதுகளும் யுகங்களாய் நீள்கின்றன.

தொலைபேசி அழைப்புக்கள் ஒவ்வொன்றுமே அவன்தான் என்ற நினைப்பில் மின்சாரத் தாக்குதலாய் என்னை அதிர வைக்கின்றன. பின் அவனில்லை என்றானதும் காற்றுப் போன பலூனாய் எல்லா அதிர்வுகளும் கலைந்து போகின்றன. எதையும் செய்ய முடியாமல், உடல் வலுவிழந்தது போலச் சோர்கிறது. மனம் சாப்பிட மறுக்கிறது. அடிக்கடி கண்கள் பனித்துப் பனித்து விழியோரங்களில் வழிகின்றன. குழறி அழுது விடலாம் போலிருக்கிறது. மை கொண்டு எழுதியவை என் மனசு போலக் கண்ணீரில் கரைகின்றன. ஏன் ஏன் இப்படியானது, ஏன் என்னை இப்படிப் பைத்தியமாய் ஆக்கினான், என்று என்னையே கேட்கிறேன். காதல் ஒரு போர் போன்றது என்பதை அப்போதுதான் உணர்கிறேன்.

ஆனாலும் அடுத்து வரப் போகும் அவனது ஒரு அழைப்பிலோ, சின்ன மின்னஞ்சலிலோ நான் சிறகடிப்பேன். இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோசமானவளாக ஆனந்தச் சிறகுகளை விரித்த படி உயர உயரப் பறந்து கொண்டே இருப்பேன். என் வானம் எனக்கு மட்டும் சொந்தமாக இருக்கும். மீண்டும் ஏதோ ஒரு வார்த்தையாலோ அல்லது வார்த்தைகளே இல்லாத மௌனத்தாலோ அவன் என்னை நோகடிக்கும் வரை பறந்து கொண்டே இருப்பேன். அவன் என்னை நினைக்கவில்லையோ என்ற நினைவுகளுடன் மோதி, மூக்குடைந்து, என் சிறகுகள் கிழிந்து கீழே தொப்பென வீழும் வரை பறந்து கொண்டே இருப்பேன்.

வீழ்ந்த பின்னும் மின்னஞ்சல் தேடி, தொலைபேசி அழைப்புக்காய் ஓடி… அவன் நினைவுகளில் வாடிக் காத்திருப்பேன்.

அவ்வப்போது என் கண்கள் பனித்து விழியோரம் உருள்கின்ற கண்ணீர் துளிகளிலும், ஏகாந்தப் பொழுதுகளில் இதழோரம் துளிர்க்கின்ற புன்னகைகளிலும் அவன் நினைவுகள்தான் ஒட்டியிருக்கின்றன என்று சொன்னால் அவன் நம்புவானோ, இல்லையோ, இதுதான் காதல் என்பதை நான் நம்புகிறேன்.

இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட இந்தக் காதல் என்பது மிக மிக இனிமையானது. இன்பமானது, அதை நான் முழுவதுமாக உணர்கிறேன். இதே காதல்தான் சமயத்தில் காதல் ஒரு போர் போன்றது என்ற உணர்வையும் எனக்குத் தருகிறது.

சந்திரவதனா

வியாழன், 10 ஜூன், 2010

காதல் என்பது அணையாது !



காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு வினோதமான நெருப்பு !
பற்ற வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது !
=======================
அவளை ஒரு கண நேரம்
மறந்து விட்டேன்
இறைவா! இந்த பாவத்தை
மன்னித்து விடு.
=============
என் காதலி
பிரிய வேண்டும என்று
பிரார்த்திக்க போகிறேன்
ஏனென்றால்
என் பிரார்த்தனை
எப்போதுமே நிறைவேறுவதில்லை.

======================
காதலில்,
வாழ்வுக்கும் சாவுக்கும்
வித்தியாசமில்லை,
யாரால்
என் உயிர் போகிறதோ
அவளை பார்த்துதான்
உயிர் வாழ்கிறேன்.
=======================
மலர்வனம் பற்றியோ
மதுவை பற்றியோ
பேச்சு வந்தால்
காதலியின் பெயர்
உதட்டில் வந்து விடுகிறது .
========================
இருண்டு போவதுதான்
என் விதி என்றால் !
அவள் கூந்தலாகவோ மச்சமாகவோ
நான் ஆகியிருக்க கூடாதா?!.
====================
அழைப்பதுமில்லை
கதவை தட்டுவதுமில்லை
அவள் நினைவு பெரிய கர்வத்தோடு
இதயத்தில் நுழைகிறது.....!

======================
கவிதைகளை செதுக்கிய சிற்பிகளுக்கு மறக்காமல் நன்றிகளை சொல்லிடுவோமா?.

காதல் நட்புதான்

சுரக்காத மார் சுரந்து
உனக்காகப் பாலூட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

மடியில் அள்ளிவைத்துச்
சோறூட்டிச் சீராட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

காலை எழுந்ததும்
உன் தலைகோதி நான் மயங்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

சிணுங்கிச் சிணுங்கி உன்னோடு
பொழுதெலாம் விளையாட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

எண்ணி முடியாமல்
ஈரம் குறையாத இதழ் முத்தமிட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

இடைவெளியும் இடைவலியும்
இல்லாமல் கட்டித்தழுவ
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

விட்டுப் பிரியாமலும்
தொட்டு அகலாமலும்
மூச்சோடு மூச்சாகி சுவாசிக்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

உயிரோடு உயிர்வைத்து
ஓருயிராய் உருகி ஒன்றாக
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

172

ஏனோ இப்படி
என் இதயத்தின் சந்துகளில்
நடையாய் நடக்கிறாய்
உனக்குக் கால்கள் வலிப்பதில்லையா

ஏனோ இப்படி
என் தூக்கத்தை தூக்கிச்சென்று
காலுக்கிடையில் வைத்துக்கொண்டு
மௌன மரக்கிளையில்
பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறாய்

யார் நீ
என் பைத்தியம் தீர்க்க வந்தவளா
பைத்தியம் ஆக்க வந்தவளா
என் தாக விழிகளுக்குள்
உறக்கத்தைக் கொட்ட வந்தாயா
கொரிக்க வந்தாயா

சொல்
உன் கண்களின் தீபம்
எப்படி என்னை மெழுகுவத்தியாக்கி
இப்படி உருக்கி எடுக்கிறது

காதலிக்கிறேன் உன்னை
எப்போதும்

173

அப்படி என்னதான் இப்படி
ஓயாமல் பேசிக்கொண்டே
இருக்கிறாய்

கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
அலுக்கவே இல்லை
என்ன கேட்டேன் என்றுதான்
தெரியவே இல்லை

பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
சலிக்கவே இல்லை
என்ன பார்த்தேன் என்றுதான்
புரியவே இல்லை

செவி அறியாமல் நீ பேசும் ஒலி
என் இதயக் கூட்டுக்குள்
சங்கீதம்

விழியறியாமல் நீ வீசும் ஒளி
என் உள் வானத்தில்
விடியல்

உன் சங்கீதம் சாய்ந்தால்
என் இதயம் ஓயும்
உன் விடியல் தாமதித்தால்
என் உயிர் தவறும்

உன் புகைப்படம் கண்ட
சிறுபொழுதில் இப்படி உளறினால்
உன்னை நேரில் கண்டு
நான் என்னாவேன்

174

காற்று பெண்
நெருப்பு ஆண்

துணையோடு எரியும்
துணைகேட்டு எரியும் நெருப்பு
தூண்டித் தூண்டிவிடும்
தூண்டப்பட்டு அலையும் காற்று

நிலம் பெண்
நீர் ஆண்

நிலத்தடி தேடியே நீர் பாயும்
நெருப்பிதழ் தீண்டி காற்றுத் தோள் பற்றி
ஆகாய மடிகளில் உறங்கிப்போனாலும்
நீர் ஆசையாய் ஓடிவரும்
நிலமே நிலமே என்று

நீர் வேண்டியே
நிலம் வெடித்துக் கிடக்கும்
நீரைக் கலந்தே உயிர்கள் ஈனும்

ஆகாயம் என்பதோ
ஆணும் பெண்ணும் இணைந்த
முழுமை

ஒன்றே ஒன்றென ஒன்றிக் கலந்ததில்
ஈடில்லா அமைதி
இடரில்லா நிம்மதி
உயிர் பூத்த
உச்சம்

175

பூவைப் பறித்துவிட்டால்
மீண்டும் காம்பில் இட முடியாதுதான்
ஆனால் நெருப்பைப் பறித்துவிட்டால்
மீண்டும் தீபத்தில் இட்டுவிடலாமே

சிசுவைப் பிரித்துவிட்டால்
மீண்டும் கர்ப்பத்தில் சேராதுதான்
ஆனால் நீரைப் பிரித்துவிட்டால்
மீண்டும் சேர்ந்துவிடுமே

முடியைப் பிடுங்கி நட்டால்
அது வளர வழியில்லைதான்
ஆனால் நாற்றைப் பிடுங்கி நட்டால்
இன்னும் செழித்து வளருமே

வெள்ளி விழுந்துவிட்டால்
மீண்டும் வானம் ஏறாதுதான்
ஆனால் சூரியன் விழுந்துவிட்டால்
மீண்டும் விடியலில் வானேறுமே

விதையைக் கிள்ளிவிட்டால்
அது மரமாய் வளராதுதான்
ஆனால் காதலைக் கிள்ளிவிட்டால்
அது மீண்டும் துளிர்த்துவிடுமே

176

நட்பைத் தவிர்க்கலாம்
காதலைத் தவிர்க்க இயலாது
புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா

காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க

காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை

காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர

காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்

காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்

காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்

177

பார்வைகளால் கீறிக்கீறி
காதலைச் சொல்வார்கள் சில பெண்கள்
புன்னகையால் சிறைபிடித்து
காதலைச் சொல்வார்கள் சில பெண்கள்

இப்படியாய்
கடிதங்களால்
கால்விரல் கோலங்களால்
கவிதைகளால்
கவர்ச்சி அபிநயங்களால்
காதலைச் சொல்வார்கள்
உலகெங்கிலும் பெண்கள்

நெகிழ்ந்து நெகிழ்ந்து
ஏங்கங்களைச் சுமந்து சுமந்து
உயிரின் செல்களைக் கரைத்து கரைத்து
கன்னங்களில் உருண்டு பேசும்
விழிமணிகளால்
விழிமணிகளின் உப்புப் பூக்களால்
அன்பை நேசத்தை பரிவை பாசத்தை
கருணையை காதலைச்
சொன்ன நூதனமே

உனக்கு நான் யாரென்று
அறிவதில் அக்கறையில்லை எனக்கு
ஆனால் எனக்கு நீதான்
நீ மட்டும்தான் எல்லாமானவள்

178

உன் மனதின் மௌனத்தைப்
பதிவு செய்துகொண்டே
முன்னேறுகிறேன் நான்

பின்னொருநாள்
எளிதாகச் சொல்லிவிடுகிறாய்
நான் அப்படி
நினைக்கவே இல்லையே என்று

உன் மனம் என்னிடம் மொழிந்ததைத்
தெளிவாகக் கேட்டேனே என்று வாதிடுவது
எனக்கே மடத்தனமாய்த் தோன்றுகிறது

எனக்கும் அந்தச் சாதுர்யத்தைக்
கற்றுத்தந்துவிடாதே கிளியே
மனதோடு மனதாக மட்டுமே
இழைய விழைகிறேன் நான் உன்னுடன்

உன் செடிகளின் நிஜமான பூக்களில்
தொட்டுத் துடித்துச் சிறகசைப்பதே
என் வண்ணத்துப் பூச்சிகள்

அதற்கு உன் மௌனமே போதும்
பேசுகிறேனென்று பொய்கள் வேண்டாம்

179

நாவடியில் வைத்து என்னை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் தத்தளிக்கிறாய்

குறுதி கொப்பளிக்கும் என் உயிர்
உன் அவதிகள் கண்டு செத்து மடிகிறது

சோதனையாய் ஒன்றுசெய்
என்மீது கண்ணீர் பொழியும்
உன் விழிகளை இக்கணமே தடுத்து நிறுத்திக்கொள்

பின்னெல்லாம் உன்முன்
வசந்தங்கள் திறந்துகொண்டால்
என்னை முழுவதும் மறந்து வெகுதூரம் ஓடிப்போ

அன்றி
உன்னிடம் இருப்பவையும்
தொடு தூரத்தில் தழுவக் காத்திருப்பவையும்
மூடிக்கொண்டுவிட்டால்
வா வா என் உயிரே நீ என்னிடமே வந்துவிடு

180

இனி நாம்
சந்திக்கக் கூடாது என்று
நீதானே சொன்னாய்
பிறகு ஏன் ஒரு நாளும் விடாமல்
நீ என் கனவில் வந்து தொலைக்கிறாய்

நான் உறங்கச் செல்லும்போது
நீ என் தலையணைக்குள்
ஒளிந்திருப்பாயா
அல்லது
எப்போதுமே நீ என்
இமைகளின் மேல் மாடியில்தான்
குடியிருக்கிறாயா

இப்படித்தான்
சில காலம் வருவாய்
பின் ஒருநாள் என்னை அழைத்து
இறுக்கமாகக் கட்டிக்கொண்டு
கனவில்கூட இனி நாம் சந்திக்கக்கூடாது
என்று சொல்லிவிட்டு
என் முகத்தை ஏக்கத்தோடு
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே
போயே போய்விடுவாய்