சனி, 12 ஜூலை, 2014

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1 நேரம் !!!!

நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” !

ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் ! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

“அவருக்கென்ன, ஆபீஸே கதின்னு கட்டிகிட்டு அழுவாரு”  என மனைவி புலம்பினால் உடனே எகிறிக் குதிக்காதீங்க. ஒரு நிமிடம் அப்படியே நின்று நிதானித்துப் பாருங்கள். உண்மையில் எனது நேரத்தில் எத்தனை சதவீதம் வேலைக்காய் அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காய் செலவிடுகிறேன். அந்தப் பட்டியல் உண்மையானதாய் இருக்கணும். நீங்க வீட்டில் உட்கார்ந்து செல்போனில் ரெண்டு மணி நேரம் ஆபீஸ் விஷயங்களை அரட்டையடிக்கிறது கூட இந்த பட்டியல்ல தான் வரணும். !

இப்போ அப்படியே மனைவியர் ஒரு நிமிஷம் யோசிங்க. உங்களுடைய நேரத்தில் கணவனுக்காக ஸ்பெஷலாய் நீங்கள் ஒதுக்கும் நேரம் எவ்வளவு ? சீரியல் பார்ப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, குழந்தைகளைக் கவனிப்பது எனும் விஷயங்களைத் தாண்டியும் நீங்கள் கணவனோடு நேரம் செலவிடுகிறீர்களா என்பது ஒரு குட்டிக் கேள்வி.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு ! செலவிடும் நேரம் “குவாலிடி டைம்” ஆக இருக்க வேண்டும். அரை மணி நேரம் ரெண்டு பேரும் பேச உக்கார்ந்து குற்றம் சொல்ல ஆரம்பித்தால் எல்லாம் போச்சு. கிடைக்கிற அந்த அரை மணி நேரத்தை எப்படி ஒரு அற்புத நேரமாய் செலவிடுகிறீர்கள் என்பதில் ரொம்பவே கவனமாய் இருங்கள். ஒரு ஐந்து நிமிட உரையாடல் கூட உங்களுடைய ஒரு நாளை ஆனந்தமாக வைத்திருக்க முடியும். ஒரு நிமிட சண்டை கூட உங்களுடைய ஒரு வார கால நிம்மதியை புதைகுழிக்குள் போட்டு மிதிக்கவும் முடியும்.

கணவனும் மனைவியும் மாறி மாறிக் குற்றம் சொல்லத் தொடங்கினால், தோற்றுப் போவது கணவனுமல்ல, மனைவியுமல்ல, தாம்பத்யம் தான். ஒரு ஸ்பெஷல் நேரத்துக்காக ஒரு சீரியலை கட் செய்வதோ, ஐ.பி.எல் மேட்சை ஆஃப் பண்ணி வைப்பதோ தாம்பத்யத்தைத் தழைக்க வைக்கும் !

ரெண்டு பேருக்குமே ஒரு குறிப்பிட்ட நேரம் ஃபிரீயா இருக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வது நல்ல பழக்கம். அது ஏதோ ஒரு தியாகம் மாதிரி, “உனக்காக என் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன். இப்போ பேசு” என சொன்னால் எல்லாம் போச்சு. விட்டுக் கொடுத்தலின் முக்கிய அம்சமே, தான் விட்டுக் கொடுத்தது அடுத்த நபருக்குத் தெரியாமல் இருப்பது தான். அதில் தான் உண்மையான அன்பு ஒளிந்து  இருக்கிறது !

அதை விட்டு விட்டு, “நான் பிரியா இருக்கும்போ நீ பிஸியாயிடறே, நான் பிஸியா இருக்கும்போ நீ ஃபிரீ ஆயிடறே” அப்புறம் எப்போ பேசறதாம் ? என புலம்புவதிலும் அர்த்தம் இல்லை.

கணவன் மனைவி இணைந்து அதிக நேரத்தைச் செலவிட்டால் அந்த குடும்பங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குடும்ப இயலின் பால பாடம் ! அத்தகைய தம்பதியருக்கு வருகின்ற சிக்கல்களெல்லாம் விரைவிலேயே மறைந்து விடுகின்றன. சந்தேகம் இருந்தால் உங்கள் தாத்தா, பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள். எப்போதும் சுற்றிச் சுற்றி வரும் அன்யோன்யமும், சேர்ந்தே ஊட்டி, உண்டு, சிரித்துக் களிக்கும் மாலைப் பொழுதுகளும் தங்களையறியாமலேயே குடும்ப வாழ்க்கையை எத்தனை ஆரோக்கியப் படுத்தியிருக்கின்றன என்பதை !
கணவன் மனைவி சேர்ந்து செலவிட எப்படி டைம் கண்டு பிடிப்பது ? அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது ? அதற்கு சில வழி முறைகள் உண்டு.

1. இருவருக்குமே பிடித்தமான ஒரு பொதுவான ஹாபி, அல்லது விருப்பத்தை வைத்துக் கொள்ளுங்கள். சேர்ந்து நேரம் செலவிட இது ஒரு அற்புதமான வழி. அது விடிகாலை ஜாகிங் ஆனாலும் சரி, தோட்டத்தைப் பராமரித்தல் ஆனாலும் சரி, அல்லது இசை, நடனம் எதுவானாலும் சரி, இணைந்தே பயணிக்கும் ஒரு ஹாபி இருவரையும் வெகுவாக இணைக்கும். சேர்ந்து செலவிடும் நேரத்தை உருவாக்கிக் கொடுக்கும் !

2. ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் பேசுவதற்காய் ஒதுக்குங்கள். அது காலையில் காஃபி போடும் நேரமானாலும் சரி, மாலையில் ஓய்வாய் இருக்கும் நேரமானாலும் சரி. உங்கள் வேலைக்குத் தக்கபடி ஒரு நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். அந்த நேரத்தை உங்கள் மனம் திறந்த பகிர்தலுக்காய் ஒதுக்குங்கள். நிச்சயம் உறவு வலுப்படும்.

3. இணைந்தே பிரார்த்தனை செய்கிறீர்களா ? உங்கள் வாழ்க்கை வலுப்படும் என்பதில் ஐயமில்லை. இறைவனுக்கு முதலிடம் தரும் இல்லங்களில் ஈகோ விலகி விடுகிறது, விட்டுக் கொடுத்தலும், மன்னித்தலும் தவழ்கிறது அதனால் குடும்ப உறவு ஆழமும், அர்த்தமும் அடைகிறது. இணைந்தே பிரார்த்தனை செய்வதும், அடுத்தவருக்காய் பிரார்த்தனை செய்வதும் உறவை வலுப்படச் செய்யும் விஷயங்கள்.

4. மனைவியோ, கணவனோ ஒரு வேலை செய்யும் போது அந்த வேலையைப் பகிர்ந்து செய்யுங்கள். அப்போது ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்யும் போது இருவருமே இணைந்து கொஞ்சம் நேரத்தைச் செலவிடும் சூழல் தோன்றும். அது வேலையைத் தாண்டி சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் !

5. எல்லா வேலையையும் செய்து முடிச்சப்புறம் தான் குடும்பம், எனும் அக்மார்க் மடத்தனத்தைச் செய்யவே செய்யாதீர்கள். உங்கள் பட்டியலில் குடும்பத்துக்காக நேரம் செலவிடுதல் டாப் 2 க்குள் நிச்சயம் இருக்கட்டும்.

6. இது தொழில்நுட்ப யுகம், சோசியல் நெட்வர்க் காலம். உங்கள் போனிலும், கம்ப்யூட்டரிலும் உள்ள இணையத்தை எட்டிப் பார்க்காமல் இருந்தாலே போதும் கொஞ்சம் நேரத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக உருவாக்கி விட முடியும் ! சந்தேகம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

7. மாலையில் செய்ய வேண்டிய சில வேலைகளை விடியற்காலையில் முடித்து விட முடியுமா என பாருங்கள். அந்த நேரத்தில் நீங்கள் முக்கியமான சில அலுவல்களை முடித்தால் மாலை நேரம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும், குடும்பத்தினருடன் பேசவும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தரும்.

8. யார் என்ன கேட்டாலும், “ஓகே…” என தலையாட்டும் பழக்கத்தைக் கடாசுங்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை தேவையற்ற கமிட்மென்ட்களுக்காக கை கழுவி விடாதீர்கள். மிக முக்கியமான விஷயங்கள் தவிர மற்றவையெல்லாம் “சாரி.. நோ…” எனும் உங்கள் பதிலுடன் விடைபெறட்டும் !

9. தனியே செலவிடும் நேரங்களை சும்மா சினிமா பாக்கவோ, சீரியல் பாக்கவோ செலவிடாதீர்கள். அது ஒருவகையில் தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் தான் – கதை தான். அதை விட, சேர்ந்து நடப்பது, பேசுவது, ஒரு புதிர் விளையாட்டு விளையாடுவது, கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது என செலவிட முயலுங்கள்.

10. மனைவிகள் அன்பானவர்கள். நீங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்காவிட்டால் கூட வீட்டில் இருக்கிறீர்கள் எனும் உணர்வே அவர்களுக்கு நிம்மதியையும், பாதுகாப்பையும், நிறைவையும் தருவதுண்டு. எனவே தேவையற்ற நண்பர் சகவாசங்களைக் குறைத்து வார இறுதிகளிலெல்லாம் வீட்டிலேயே இருங்கள்.

டைம் இல்லை என்பதெல்லாம் அக்மார்க் பொய். எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் உண்டு. அதை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதில் எவ்வளவு மணி நேரம் உங்கள் மனைவிக்காகவோ, கணவனுக்காகவோ ஆனந்தமாய்ச் செலவிடுகிறீர்கள் என்பது தான் கேள்வி !

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அழுத்தமாக. உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரம் ஒதுக்குங்கள், அது ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.

வியாழன், 6 மார்ச், 2014

புத்திசாலி பெண்களை விரும்பும் ஆண்கள்

இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதில் பெண்களுக்கு தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.
Young Woman Sitting in Front of a Computer and Laughingஎதிர்பார்ப்புக்கள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. மேலும் தன் துணையின் எதிர்பார்ப்பு புரிந்தும், அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்காமல் இருந்தால், உண்மையில் அந்த உறவில் எந்த ஒரு சந்தோஷமும் சுவாரஸ்யமும் இருக்காது.
• சில பெண்கள் தங்களது துணையின் நண்பர்களுடன் சகஜமாக பேசமாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆண்களுக்கு பிடிக்காது. நன்கு சந்தோஷமாக, அவர்களது நண்பர்களுடன் பேசி, துணைக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும்.
• தற்போதைய ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பர். இப்படி இருப்பதால், பெண்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த கஷ்டத்தையும் தாங்கி எதிர்த்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதால் தான். ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள்.
• எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்கள் ஓடிவிடுவார்கள். ஆகவே எந்த ஒரு விஷயத்திற்கும் அவர்களை நச்சரிக்காமல் இருக்கும் பெண்களைத் தான் ஆண்கள் விரும்புவார்கள்.
• எவ்வளவு தான் அகம் அழகாக இருந்தாலும், கொஞ்சம் புற அழகும் வேண்டுமல்லவா? எனவே அழகை சரியாக பராமரித்து வரும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்கள். அதிலும் நீங்கள் கொஞ்சம் மற்றவர்கள் சைட் அடிக்கும் வகையில் சூப்பர் பிகர் போன்று காணப்பட்டால், அவர்கள் உங்களை பெற்றதற்கு மகிழ்ச்சியாக இருப்பதுடன், பெருமையாகவும் உணர்வார்கள்.
• காதலன் எப்போதும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று எண்ணாமல், காதலனை அவர்கள் போக்கில் விடும் பெண்களையும் ஆண்களுக்கு பிடிக்கும். ஏனெனில் உறவில் கொஞ்சம் சுதந்திரம் இருந்தால் தான், அந்த உறவு ஆரோக்கியமாக இருக்கும்.
• புத்திசாலித்தனத்துடன் செயல்படும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் இத்தகைய பெண்களால் எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து வெளிவருவார்கள். மேலும் சில ஆண்கள் தான் சொல்வது தான் சரி என்று இருப்பார்கள். அத்தகைய ஆண்களை புத்திசாலித்தனமான பெண்கள் எளிதில் மாற்றுவார்கள்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.


1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்...

புதன், 12 பிப்ரவரி, 2014

காதலர் தினம்


 

காதலனே ..............! 
உன் நினைவுத் தடங்களை 
கண்ணீரோடு தினமும் - என் 
தலையணையில் தேடிப் பார்கிறேன் 
இனிக்கும் உன் குரலை நினைத்தப் பின் தான் 
இமைகள் நிம்மதியாக ஒன்றுடன் 
ஓன்று அணைத்துக் கொண்டு 
தூக்கதை தருகிறது - இருந்தாலும் 
கனவில் நீ வந்து கண்டபடி 
கண்ணா மூச்சியாடுகிறாய் ..............! 

காதலனே ......................! 
ஒவ்வொரு காலைப் பொழுதில் 
கண்விழிக்கும் போது - என்னுடன் 
நீ உறங்குவதாய் நினைத்து -கட்டிலில் 
உன்னைத் தேடி ஏமாற்றம் அடைகிறேன் ...! 

என் வாசமுள்ள நேசனே........!என் இடுப்பை 
கிள்ளி சீண்டிப் பார்க்கும் ராட்ஷசனே 
நீ கிள்ளும் போது கையை தட்டி விட்டது 
மறுபடியும் நீ சீண்டி விளையாட மாட்டயா -என்ற 
ஏக்க பொய் கோபத்தினால் தான் என்பதை 
உணர்ந்துக் கொள்ளடா .......! 

என் இதயக் காதல் துணையே ......! 
என்னை உன் மார்பில் தாங்கி 
முத்த மழை பொழியும்போது -அந்த 
இன்பசுகத்தில் செத்து விட துடித்தேனடா ...! 
உன் ஒற்றை விரலால் பம்பரமாய் சுற்றி 
என் இளமையை கொதிக்கவிட்டு 
அழகு பார்த்தவனே ......! 


நீ கோபப் படும்போது சிவந்து போகும் 
உன் காது மடல்களை தின்று விட 
துடிக்கிறேனடா- இதழை வெளுப்பாக்கி 
கண்களை சிவக்கவைத்தவனே.....! 

சித்திரமாய் உன்னை என் நினைவில் 
செதுக்கி - அதில் என்னை நான் இழைத்துக் 
கொண்டது உனக்கு தெரியுமாடா ......!-காதலால் 
என்னை துண்டு துண்டாய் உடைத்தவனே ...! 
உன்னை கட்டிக் கொள்ள என்னை ஒட்டிவிடு 

இதே காதலர் தினத்தில் ஒருநாள் என்னை 
பிரிந்து போனவனே..! - வருடங்கள் போய் 
பலவானது - இருந்தாலும் உனக்காய் வாசமுடன் 
காதலோடு காத்திருக்கிறேன்...! இன்றாவது 
வந்து விடு .....! - என்னை ஒட்டிவிடு ........!

காதலர் தினம் - சிறப்பு பார்வை



நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் தற்போது பரவி வரும் காதல் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை சீரழித்து வருகிறது. தமிழகத்தில் வாலிப பருவத்தில் வரும் காதலில் பெரும்பாலானவை தோல்வியையே சந்தித்து வருவதற்கு அது உண்மையான காதலே இல்லை என்பதே முக்கிய காரணம் ஆகும்.

டீன் ஏஜ் பருவம் என்பது தீயில் நடப்பது போன்றதாகும். வாலிப பருவத்தில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சில தடுமாற்றங்கள் நிகழ்வதே இங்கு காதலாக கருதப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் தடுமாற்றத்தை காதல் என்று எடுத்துக்கொள்வது தவறு.  ஆனால் அத்தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவது நெருப்பாற்றை நீந்தி கடப்பதற்கு சமம். அந்த அளவுக்கு சிந்திக்கும் திறன் அப்பருவத்தில் ஏற்படாது என்பதும் முற்றிலும் உண்மையே. அத்தடுமாற்றத்தில் இருந்து விடுபட்டு வாழ்க்கையின் உண்மையை புரிந்து கொண்டால் வாலிப பருவத்தில் வருவது காதலே அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.

டீன் ஏஜ்

உடலில் ஏற்படும்
உணர்ச்சி மாற்றம்
அது
காதல் அல்ல
காமம்...

முதலில் எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு மனிதன் வாழும் சூழ்நிலை உருவாகவேண்டும். அதற்கு அவன் சுயமாக நிற்கவேண்டும். அவ்வாறு சுயமாக நிற்க அவன் நன்றாக படிக்கவேண்டும். அதன் பின் நல்ல வேளையில் அமரவேண்டும். அதற்கு பின் தான் காதலை பற்றி ஒருவன் சிந்திக்க வேண்டும். தனக்கு பிடித்த பெண்ணை பற்றி  சிந்தித்து, உணர்ந்து அப்பெண் தன் வாழ்க்கையில் இணைந்தால் தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற மன உறுதிக்கு ஒருவன் வரவேண்டும்.

பின் தனக்கு உயிர் கொடுத்தவர்களும், சமூகத்தில் உயர்வான நிலைக்கு தன்னை உயர்த்தியவர்களுமான பெற்றோரிடம் தனது காதலை பற்றி கூறி அவர்களது சம்மதத்தை பெற வேண்டும். தனது மகனை மிகப்பெரிய அளவுக்கு சமுதாயத்தில் உயர்த்திய பெற்றோர் நிச்சயமாக அவனின் காதலையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது நிஜம். அப்படி அமையும் காதல் திருமணம் தான் நிஜ வாழ்க்கையில் வெற்றி பெறும் காதலாக அமையும். இது காதலின் முதல் வகை.

இனி இரண்டாவது வகையை பார்ப்போம். தனது மகனுக்கு நல்ல கல்வியை கொடுத்து அவன் நல்ல வேலையில் அமர உதவிய பெற்றொர் அவனது மண வாழ்க்கையும் நல்ல விதமாகவே அமையவேண்டும் என்றே பெரிதும் விரும்புவர். அவ்வாறு தனது நலனை பற்றி சிந்திக்கும் பெற்றோரின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணை திருமணம் செய்துகொண்டு தனக்கு வரும் மனைவியை காதலித்து, பெற்றோருக்கும் மனைவிக்கும் ஏற்றவாறு குடும்ப வாழ்க்கையை நடத்த முன்வரவேண்டும். இந்த திருமண வாழ்க்கையில் மூன்று முடிச்சுகளுக்கு ஏற்றவாறு முதல் மூன்று வருடங்கள் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் அக்னிப்பரீட்சையாக அமையும்.

இந்த மூன்று வருடங்களில் பெற்றோர் மற்றும் மனைவி ஆகிய இரு தரப்பினரையும் மனம் கோணாதவாறு பார்த்துக்கொண்டு அவன் அப்பரீட்சையை சாமர்த்தியமாக கடந்துவிட்டால் அதுவும் வெற்றி பெறும் காதலாக அமையும். அவனுக்கு அமையும் மனைவியும் விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளவளாக இருந்து விட்டால் அக்காதல் இரட்டிப்பு வெற்றியை அடையும்.

ஆனால் நடைமுறை வாழ்க்கையில் கணக்கெடுத்து பார்த்தால் இங்கு பெரிதும் சரிவே காணப்படுகிறது. கணவரின் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக நடந்துகொள்ளவேண்டும், தன்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நற்பெயரை வாங்கித்தரவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புவதாகவே தெரியவில்லை.

அதிலும் வேலைக்கு போகும் பெண்ணாக இருந்துவிட்டால், தலைகுனிந்து மரியாதையோடு நடக்க வேண்டிய அவள் தலைக்கணத்துடனும், தான் என்ற அகம்பாவத்துடனும் நடப்பதன் காரணமாகவே தமிழகத்தில் தற்போது அதிக அளவில் விவகாரத்து ஏற்படுகிறது. அதிலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரை அவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு இயற்கைக்கு முரணாக நடந்து கொள்ளும் மருமகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு தனது மகனை மட்டும் மருமகள் நன்றாக பார்த்துக்கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் தங்களது மகனை விட்டு ஒதுங்கிவிடுவதும் இன்றைய சமூகத்தில் பரவலாக காணப்படுகிறது.

திருமணம்

இல்லற வாழ்வின்
தொடக்கம்
இடியாப்ப சிக்கல்களின்
துவக்கம்
இறைவனின் பரிட்சைக்கு
முன்னோட்டம்

சரி. மூன்றாவது வகையை பார்ப்போமா?

தன்னை திருமணம் செய்து கொண்ட கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும். தனது மாமனார், மாமியாரின் விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் மனைவியின் தியாகத்தை புரிந்து கொண்டு அவளுக்கு உண்மையான அன்பை கொடுக்கவேண்டியது ஒவ்வொரு கணவனின் முக்கிய கடமையாகும்.

பெற்றோரோடு வசிக்கும் போது அந்த அன்பை மனைவிக்கு கொடுப்பதற்கு தவறினாலும் பெற்றோரின் காலத்திற்கு பின்னாவது தன்னையே நம்பி வந்து தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் துன்பங்களையும், இன்பங்களையும் தன்னுள்ளே சுமந்து வாழ்ந்து வரும் மனைவிக்கு உரிய மரியாதையையும், நல்ல அன்பையும் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக தரவேண்டும்.

தனக்கும், தனது பெற்றோருக்கும், தங்களின் குழந்தைகளுக்காகவும் இல்லறத்தை நல்லறமாக நடத்திவரும் மனைவியை தன் இரு கண்களாகவே ஒவ்வொரு மனிதனும் கருதவேண்டும். தற்போதைய நடைமுறை வாழ்வில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருதரப்பும் சரியாக புரிந்து செயல்படுகின்றனர் என்பது பெருமளவு சரி தான். ஆக மேற்கூறிய வகையில் அமையும் இல்லற வாழ்க்கை காதலின் மும்மடங்கு வெற்றியை பறைசாற்றுவதாக அமையும்.

இங்கே தனக்காக தியாக உள்ளத்தோடு வாழும் மனைவியை பற்றி புரிந்துகொள்ளாமல் மனைவியை கொடுமைப்படுத்தி மிருகம் போல் நடந்து கொள்ளும் ஆண்களும் சமூகத்தில் உள்ளனர். அவ்வாறு அமையும் நரக வாழ்க்கையையும் சகித்துக்கொள்ளும் பத்தினித் தெய்வங்கள் நமது கிராமங்களிலும் நகரத்திலும் ஏராளமானோர் உள்ளனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

பெண்

கணவனை
புரிந்துகொண்டாள்
கடமையை
தெரிந்துகொண்டாள்
இல்லறத்தை
இனிமையாக்கினாள்
இவளே குடும்பத்தின்
தலைமகள் ஆனாள்...

இந்த உண்மைகளை புரிந்து கொண்டு எப்படிப்பட்ட காதல் வாழ்க்கைக்கு நல்லது என்பதை புரிந்துகொண்டு ஆண்களும், பெண்களும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்

திங்கள், 10 பிப்ரவரி, 2014

கல்யாணமானவரகள் கல்யாணமாகாதவர்கள் யாவரும் வாசித்து பயனுறுங்கள்

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 

1.எந்த வேளையிலும் உண்மை பேச வேண்டும்...
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

உறவு அழியாமல் நிலைத்திட காதல் என்பது அவசியம்......

பொறாமை என்ற குணம் ஒரு உறவையே நாசமாக்கிவிடும். பொதுவாக ஒரு உறவில் பெண்கள் தான் அதிக பொறாமை குணத்துடன் பாதுகாப்பின்மையோடு இருப்பார்கள். தன் காதலனோடு பல பெண்கள் கடலை போடும் போது அந்த காதலிக்கு பொறாமை குணம் உண்டாவது இயல்பு தானே? அந்த சூழ்நிலையில் நாம் உணர்ச்சிவசப்பட்டு நடக்கும் போது தான் பிரச்சனைகள் உருவாகிறது. பல பெண்கள் உங்கள் காதலனிடம் கடலை போடும் போதும் பதிலுக்கு அவரும் வழிந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்ட வேண்டும்.


உங்கள் காதலன் பார்க்கும் அனைத்து பெண்களுடனும் நட்புடன் பழகும் போது நீங்கள் கூடுதல் கவனத்துடன் நடக்க வேண்டும். ஆனால் சரியான காரணமே இல்லாமல் பொறாமை பட்டால் உங்கள் உறவு புளித்து போய் மூச்சு முட்டி தத்தளிக்கும். எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அல்லது காதலாக இருந்தாலும் சரி, அவநம்பிக்கை என்பது மட்டும் இருக்கவே கூடாது. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே காதலும் நம்பிக்கையும் இருப்பதால் மட்டுமே உங்கள் துணை உங்களுடன் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியோடு இருந்த காலங்கள் எல்லாம் மறைந்து போவதற்கு ஆத்திரமும் பொறாமையும் காரணமாக அமைந்து விடும். உங்கள் உறவில் பொறாமை ஏற்படுவதற்கான காரணங்களை தவிர்க்க பல வழிகள் இருக்கிறது. அதற்கான சில டிப்ஸ்களை பற்றி இப்போது பார்க்கலாமா... நம்பிக்கை எந்த ஒரு உறவுக்குமே அடிப்படையாக விளங்குவது நம்பிக்கையே. உங்கள் துணையை எப்போதுமே உங்கள் அடி மனதில் இருந்து நம்புங்கள். அதற்காக அவரை குருட்டுத் தனமாக நம்ப வேண்டும் என்பதில்லை. உங்கள் நம்பிக்கையை முதலில் உங்கள் துணை சம்பாதிக்க வேண்டும். 
 
நம்பிக்கை என்பதை முதலில் நாம் சம்பாதிக்க வேண்டும். ஒரு முறை நம்பிக்கையை இழந்து விட்டால் அதனை மீண்டும் பெறுவது சுலபமல்ல. அதனால் பொறாமை குணத்தை தவிர்க்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் துணையின் மீது நம்பிக்கை வையுங்கள். அதே போல் அவரின் நம்பிக்கையையும் சம்பாதித்துக் கொள்ளுங்கள். 
 
உரையாடுங்கள் ஒரு உறவுக்கு பாலமாக இருப்பது உரையாடல்களே. ஒரு காதலன் காதலியிடையே சரிவர பேச்சுவார்த்தைகள் இல்லையென்றால் அவர்கள் காதல் உறவில் ஏதோ பிரச்சனை உள்ளதென்று அர்த்தமாகும். இரு உள்ளங்கள் ஒன்று சேர்வதே வாழ்நாள் முழுவதும் அவர்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழ்வதற்காகவே. வெறுமனே உடலுறவு மட்டும் உங்களை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வைத்திருக்காது. உரையாடல்கள் என்பதும் கூட உங்கள் உறவில் பொறாமையை தவிர்க்க உதவும்.
 
விருப்பு வெறுப்புக்கு முக்கியத்துவம் எந்த ஒரு உறவும் வெற்றிகரமாக அமைய, அந்த ஜோடி தங்கள் தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அவரவரின் சொந்த விருப்பு வெறுப்புகளில் தலையிடக் கூடாது. இதில் பிரச்சனை ஏற்படும் போது தான் அந்த உறவில் பாதுகாப்பின்மை மற்றும் பொறாமை முளைக்க துவங்கும். உங்கள் துணையின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதில் அளவுக்கு அதிகமாக தலையிடக் கூடாது. அவர்களை அழுத்தி பிடிக்காமல் நிம்மதியாக மூச்சு விட விடுங்கள். நீங்கள் அவரை அதிகமாக அழுத்த அழுத்த அதற்கேற்ப உங்கள் காதலும் அழியத் தொடங்கும். 
 
புரிதல் ஒரு உறவில் பொறாமையை வளர விடாமல் தடுக்க ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும். உங்கள் உறவு ஆரோக்கியத்துடன் நீடிக்க புரிதல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள் துணையின் தேவைகளை நன்றாக புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கைக்கும் புரிதலுக்கும் வித்தியாசம் உள்ளது. அவைகள் இரண்டும் வேறு வேறு தான் என்றாலும் ஒரு உறவு நீண்ட நாட்கள் நிலைத்திட அவை இரண்டுமே முக்கியம் தான். 
 
காதலை வாழ விடுங்கள் என்ன ஆனாலும் சரி, உங்கள் இதயத்தில் இருக்கும் காதல் மட்டும் தேய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த காதல் உணர்வு உங்களை விட்டு நீங்கி விட்டால் உங்கள் துணையை விட்டு எப்படி பிரியலாம் என்ற எண்ணம் தோன்ற துவங்கி விடும். ஒரு உறவு அழியாமல் நிலைத்திட காதல் என்பது அவசியம். காதல் மட்டும் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி அதனை தைரியமாக சமாளிக்கலாம். அதே போல் பொறாமை மற்றும் பாதுகாப்பின்மையையும் உங்கள் காதலினால் சுலபமாக தவிர்த்து விடலாம்.