வியாழன், 15 ஜூலை, 2010

மனைவி அமைவதெல்லாம் ..


ஒருவனுடைய வாழ்க்கையை இரண்டா பிரிக்கலாம். கிறிஸ்து பிறப்பதுக்கு முன் கிறிஸ்து பிறப்பதற்கு பின் என்றமாதிரி திருமணத்துக்கு முன் திருமணத்துக்கு பின். எதனால அப்படிஎன்றால் ஒருவன் என்னதான் சல்லித்தனம் பண்ணினாலும் கல்யாணம் ஆயிருச்சி என்றால் அவ்வளவுதான் பொட்டிப்பாம்பா அடங்கிருவான். நேத்துவரைக்கும் காடுமேடெல்லாம் சுத்தித்திரிஞ்சவனை இன்னைக்கி காணோமென்று கேட்டால் அவனுக்கு கல்யாணம் ஆயிருச்சிப்பா என்பார்கள். அந்தளவுக்கு ஒருவனுடைய வாழ்க்கையில் ஒரு பெண் வந்துட்டான்னா கேட்கவே வேண்டாம் அவனோட வாழ்க்கை டோட்டல் சேஞ்ச்தான். அந்தளவுக்கு மனைவியோட முக்கியத்துவம்.

மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்ன்னு சும்மாவா சொன்னாங்க.. ஆமா கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்துப்பயிர்தான். ஒருவனுக்கு அவனோட டேஸ்ட்டுக்கு தகுந்தமாதிரி அவனது பெற்றோர், தன்பிள்ளைக்கு ஏத்த மனைவியை எவ்வளோ கஷ்டப்பட்டு தேடி அவனுக்கு கல்யாணம் செய்துவைக்கிறாங்க. காதல் கல்யாணங்களில் இந்த நிலை மாறலாம். அவனே/அவளே அவன்/அவள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறாங்க. இந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவன், பெற்றோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்.

ஒரு பெண்ணுக்கு என்னதான் பெற்றோர்கள் வளர்ப்பில் இருந்தாலும் கல்யாணம் பண்ணிகொடுத்ததும்தான் முழு அந்தஸ்து பெறுகிறாள். அதேமாதிரி ஆணுக்கும் நேத்துவரைக்கும் அலட்சியமா நினைத்தவர்கள் இன்னக்கி ரொம்ப மரியாதை கொடுப்பாங்க. ஏ அவன் குடும்பஸ்தன் அவனுக்கு எல்லா முன்னுரிமையும் கொடுங்கப்பா என்று கொண்டாடுவாங்க. மனைவிதான் ஒருவனுக்கு வாழ்க்கையோட அர்த்தத்தை புரியவைக்கிறாள். அதேமாதிரி ஒருவனுக்கு பாதிபலம் அவனோட மனைவிதான்.

ஆணுக்கு இரவில் மட்டும் சுகத்தை கொடுப்பது மட்டுமல்ல பெண்ணோட வாழ்க்கை. அவனுக்கு துணையாக இருந்து அவனோட கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்து அவனுக்கு நேரான வழி இதுதான் என்று சுட்டிக்காட்டிபவ‌ளும் அவனோட மனைவிதான். கணவன் எதாவது கோல்மால் பண்ணினானென்றால் அவன மண்டையில தட்டி திருத்துபவளும் அவன் மனைவிதான். கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த வீட்டையும் தன் புத்தியால் திறமையால் முன்னுக்கு கொண்டுவருவது அவன் மனைவிதான்.

கணவன் இதயத்தில் மட்டும் இடம்பிடிப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள மாமனார் மாமியார், நாத்தனார், கொழுந்தனார் இவர்களின் மனதிலும் இடம் பிடிக்கும் பெண் ஒரு புத்திசாலி என்றால் அது மிகையாகாது. தன் புகுந்த வீட்டில் எத்தனை குறையிருந்தாலும் அதனை மறைத்து தன் குடும்பத்துக்காக வாழும் ஒரே ஜீவன் மனைவிதான். இதே நகரத்தில் வாழும் பெண்கள் தன் கணவனுக்காக கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று குடும்ப கஷ்டத்தை தீர்க்க பாடுபடுகின்றனர். கணவனை ஊதாரித்தனமாக செலவு செய்யவிடாமல் கட்டுக்கோப்பாக வைத்து சிக்கனமாக்கி குடும்பத்தை முன்னேற்றுகிறாள்.

ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னால் ஒவ்வொரு பெண்தான் அடித்து சொல்லலாம். ஒவ்வொரு ஆணின் பலமும் பலவீனமும் அவன் மனைவிதான். புகுந்தவீட்டில் தான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் இல்லாததால் கல்யாணம் முடித்த இரண்டே நாளில் தனிகுடித்தனம் அமைக்க காரணமும் இதே மனைவிதான். மனைவி சொல்வதை கேட்டு குடும்பத்தை பிரிக்கும் ஆண்கள் தங்கள் பெற்றோர்கள் எவ்வளவு மனம் குமுறுவர், வேதனைக்குள்ளாவர் என்பதை அறிய வாய்ப்பில்லை. மனைவி சொல்லே மந்திரம் என்று வாழும் ஆண்களும், கணவனுக்கு தலையணை மந்திரம் போட்டு தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் பெண்களும் நல்லாவே வாழ்ந்ததா சரித்திரம் இல்லையெனலாம்.

அதேபோல குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே சண்டை மூட்டிவிட்டு குடும்பத்தை இரண்டாக பிரித்து தான்மட்டும் நல்லா வாழணும் என்று நினைக்கும் சுயநலமிக்க மனைவிகள் நிறைய பேர் உண்டு. மனைவி சொல்வதை கேட்கலாம் தப்பில்லை. ஆனால் அது நன்மைபயக்கும் விஷயமாக இருக்கவேண்டும். சில குடும்பங்களில் கணவனை தன் கட்டுக்கோப்பில் வைத்து மாமியார், மாமனாரை கொடுமைப்படுத்தும் மருமகள்கள் பலேபலே.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தன் பெற்றோர் பேச்சை கேட்கும் பெண்கள் ஏன் தன்கணவன் மாமியார், மாமனாருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பது இன்றுவரை விடை தெரியாமலே உள்ளது. அதேமாதிரி தன் பெற்றோர் பேச்சை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தும் ஆண்கள் நிறைய பேர் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் துணையாக வரும் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுப்பது ஏனென்றே தெரியல.

இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்துவரை சென்று பிரிந்துவாழும் தம்பதிகள் நிலைமை வருத்தத்துக்கு உரியது. ஈகோவை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி என்ற தூண்கள்தான் தாங்கி நிற்கிறது. அதில் ஒன்று சரிந்தாலும் அவ்வளோதான். நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. இதில் பெரிய கஷ்டம் குழந்தைகள்பாடு திண்டாட்டம். குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.

எனவே இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் ஒரு குடும்பம் ஒரு இனிய இல்லறமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக